பாகிஸ்தானிக் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் சிறுவர் சிறுமியர் ஒருவரையொருவர் கைகளால் வேகமாக அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் அங்குள்ள கனேவால் மாவட்டம் மியான் சன்னு நகரில் உள்ள அரசுப் பள்ளியில் அண்மையில் ஒருநாள் இடைவேளையின்போது பிலால் மற்றும் ஆமிர் என்னும் இரு மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடியுள்ளனர்.
இந்த விளையாட்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் அந்த காட்சிகளை தங்களது கைபேசிகளில் வீடியோவாக பதிவும் செய்துள்ளனர்.
நேரம் செல்லச்செல்ல அவர்கள் இருவரும் வெகு ஆவேசமாக மோதிக்கொண்டனர். ஒருகட்டத்தில் ஆமிரின் தாக்குதலை தாங்க முடியாத பிலால் பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த மாணவனுக்கு உரிய முதலுதவி அளிக்க யாரும் முன்வராததால் கழுத்தில் விழுந்த அடியால் பிலாலின் உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் உயிருடன் இருந்தபோது பிலாலும் ஆமீரும் மோதிக்கொண்ட கடைசி வீடியோ காட்சிகள் சமூகத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
